Skip to main content

எதிர்கால வல்லரசின் 50 மில்லியன் பட்டினியாளர்கள்

நான் அந்த அறிக்கையைப் பற்றிப் படித்ததும் திடுக்கிடவில்லை. நீங்களும் மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இந்திய மக்களின் பட்டினி நிலை பற்றிய ஐ.எஃப்.பி.ஐ. எனும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை முடிவுகள் நாம் உள்ளூர அறிந்து வைத்திருந்தது தான்:
இந்தியாவின் ஐம்பது மில்லியன் பட்டினியாளர்கள்.
பசிப்பட்டியலில் மத்திய பிரதேச மாநிலம் பஞ்சடைத்த கண்களுடன் ஊடகங்களில் வலம் வரும் எத்தியோப்பியாவை முந்தியுள்ளது. குழந்தை ஊட்டச்சத்துப் பட்டியலில் பஞ்சாப் மாநிலம், கெபோன், ஹொந்தாரஸ், வியட்னாம் போன்ற ஆப்பிரிக்க தேசங்களுக்கு வெகு கீழே உள்ளது மிகக்குறைந்த வறுமை சதவீதம் (6.16%) கொண்டுள்ளதாய் சொல்லப்படும், சிறப்பு செயல்பாட்டு மாநிலமாய் விருதளித்துக் கொண்டாடப்பட்ட பஞ்சாப். ஒரேயடியாய் தலை குனிய வேண்டாம். யு.என்.ஒ.டி.சி.யின் உலக போதை மருந்து அறிக்கைப்படி போதை மருந்துப் போக்குவரத்தில் பஞ்சாப் 'முதலிடத்தில்' உள்ளது. தலித்துகளுக்கு மத உரிமை மறுத்து, தங்கள் மத நூலான குரு கிராந்த் சாகிப்பை தீண்டத்தகாதவர்களிடமிருந்து பாதுகாப்பதிலும் பஞ்சாபியர்கள் பேர் பெற்றவர்கள்தாம்.
பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பிஞ்சு சிசுக்களின் மரணங்களும், அரைவயிற்றுக் கனல் வயிறுகளும் தமிழ் நாடு, கேரளாவில் அதிகம்.
இங்கு உணவுப் போதாமை பற்றி ஒரு சிறு குறிப்பு.
உணவு ஆற்றலை கலோரி எனும் unit கொண்டு அளக்கிறோம். உதாரணமாய் ஒரு இட்லி 80 கலோரிகள். ஒரு மனிதனுக்கு தினசரி 1200--1800 கலோரிகள் வரை தேவைப்படுகிறது. நம் நாட்டில் ஐம்பது மில்லியன் மக்கள் சராசரியாய் 600 கலோரிகள் மட்டுமே பெறுகின்றனர். எத்தனை இட்லிகள், கணக்கிடுங்கள்!
இந்தியாவின் 12 மாநிலங்கள் மக்களை அரைப்பட்டினியாய் வைத்துள்ளன. முதல் வில்லன் மத்திய பிரதேசம்தான். ஹரியானா, அஸ்ஸாம் பற்றியும் குறிப்பிட வேண்டும். உணவுப்போதாமையைப் பொறுத்தமட்டில் 25 துணை சஹாரா நாடுகளைவிட, தெற்காசியாவை விட கீழே தான் உள்ளோம். இத்தனையும் வல்லரசு நாடாக இந்தியா மல்லுக் கட்டி நிற்கும்போது. ரொம்ப விசனப்பட வேண்டாம். போட்டியில் வங்கதேசத்தைச் சற்று முந்தி விட்டோம். ஏனென்றால் இந்தியாவின் உணவு உற்பத்தி அதிகம்.
பிரதமரின் பொருளாதார அறிவுரைக் குழு உறுப்பினரான ஜி.கே. சத்தா இந்த நிலைக்குக் காரணமாய் இந்தியாவின் அடித்தட்டு மக்களை உதாசீனப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளைச் சாடியுள்ளார். உண்மை! ஜி.டி.பி. வளர்ச்சி மத்திய, உயர்மத்திய, உயர்தட்டு மக்களின் முகம் மட்டுமே. பஞ்சத்தில் வயிறு வீங்கின குழந்தை மாதிரி இந்தியா வளர்ந்து வளர்ந்து ஒருபக்கம் மட்டும் வீங்கிப் போய் விட்டது. சமீபத்தில் அசுர பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள குஜராத், சட்டீஸ்கர்கு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கீழ்த்தட்டு மக்களின் பட்டினி நிலை சிறந்த உதாரணம்.
நமது அரசாங்கம் தொழிற்பயிற்சி, அடிப்படை, உயர் கல்வி உடைய மத்திய, உயர் மத்திய வர்க்க இளைஞர்களுக்கு உற்பத்தி, சேவை தொழில் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதன் மூலம் வறுமையை ஒழித்துவிடலாம் என்று நம்புகிறது. இதுதான் பிரதமர் ம.மோ. சிங்கின் 'வறுமைப் போர்' திட்டம்.
மேற்கூறிய தகுதிகள் இல்லாத, விவசாய, கூலி வேலை செய்வோரின் மீது அக்கறை அதிகமாகும் போது இந்திய அரசியல்வாதிகள் தொழிலதிபர்களிடம் விவசாய நிலத்தைக் கொடுத்து வாங்கி நாடகம் போட்டு முடித்து ஏ.ஸி அறையில் தூங்கப் போய்விடுவார்கள். குறைந்த பட்ச கூலி நியமனம் செய்து, ஆனால் அதில் பாதி மட்டும் நொடிந்த மக்களுக்குக் கொடுத்து வயிற்றில் அடிப்பார்கள்.
இந்தியாவில் 17 மில்லியன் குடும்பங்கள் சொந்த நிலங்கள் ஏதும் அற்றவை. 800 மில்லியன் கிராமவாசிகளுக்கு 400 மில்லியன் ஏக்கர் விவசாய நிலம் என்ற விகிதாச்சார அவலம் நிலவுகிறது. மிச்ச மக்கள் எங்கே போவார்கள்? அவர்கள் நிலம் எங்கே? நமது இந்திய நகரங்கள் புற்று நோய் போல் அவர்களின் வாழ்வாதாரத்தை வளர்ச்சி என்னும் பெயரில் சுரண்டி விட்டன. சிங்கூரை எடுத்துக் கொள்வோம். கார்த் தொழிற்சாலைக்கு 1000 ஏக்கர் நிலம் எதற்கு? டாட்டாவுக்கு ரியல் எஸ்டேட் கனவுகள் இருந்தனவா? இந்திய விவசாய நிலக்கொள்ளையைப் பொறுத்த மட்டில் இந்தக் கேள்விகள் ஆராயப்பட வேண்டியவை.
இந்தியா நகரங்களை மட்டுமே நோக்கி வளர்கிறது. நகரங்கள் உச்சபட்ச ஆடம்பரங்களுடன் வாழ்வதற்கான மனிதக் கனவின் தூல வடிவம். கலிபோர்னியாவோ, சிங்காரச் சென்னையோ எல்லா பணக்கார நகரங்களும் சளைக்காமல் ஏழைகளை உற்பத்தி செய்கின்றன. ஒருவித கழிவுப் பொருள் போல.
பிளேட்டோ நினைவுக்கு வருகிறார். நகரங்களில் ஏழை--பணக்கார பிளவு நிகழ்வதைத் தவிர்க்க முடியாது என்றார் அவர். ஏனென்றால் நகரம் ஒரு போட்டிக்களம். வரிசையில் பிந்தியவர்கள் சாக்கடை வாசிகளாவது முகம் திருப்பிக் கொண்டே நாம் மறைமுகமாய் அங்கீகரிக்கும் உண்மை. நகரங்களின் வளர்ச்சி மீதே நம் உச்சபட்ச கவனம் இருப்பதால், கைவிடப்பட்ட கிராமவாசிகள் நகரம் நோக்கிக் குவிய இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு விகிதாச்சாரம் மேலும் வீங்குகிறது.
பிளேட்டோ அடுத்து ஒன்று சொன்னார். இவ்வாறு நகரம் ஏற்றத்தாழ்வின் உச்சத்தை அடைந்து, கர்ப்பிணியின் பத்து மாத வயிறு போல் ஆகும் போது, ஏழைகள் வெகுண்டெழுந்து புரட்சி செய்து, ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்றார். மீண்டும் சக்கரம் அடுத்து ஒரு சுற்று சுற்றி வரும்போது, மற்றொரு புரட்சி காத்திருக்கும்.
இதோடு முழுக்க ஒத்துப் போக முடியவில்லை. ஆனாலும் பங்களூருவில் ஐ.டி. வர்க்கத்தினர் மீது பொது மக்கள் ஏக காண்டில் இருப்பதாய் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் கட்டுரை ஒன்று சொல்கிறது. ஐ.டியினரின் குடி, கும்மாள கலாச்சாரம், அவர்கள் மனை நிலங்களின் விலையை, வீட்டு வாடகையை, விலைவாசியை எகிற விட்டது, குடும்பத்துக்குள்ளே ஒருவர் ஐ.டி.க்காரர் மற்றவர் சாதா குமாஸ்தாவாக இருப்பதனால் ஏற்படும் சமனிலை இழப்பு, சச்சரவு, சூழல் மாசுபடுவது, போக்குவரத்து நெரிசல் என பங்களூருவின் பூர்வகுடிகள் கடுப்பாகி புகார்களை அடுக்குகின்றனர். அங்கு ஐ.டி. கனவான்கள் மீது பரவலான எதிர்ப்பு அலை இவ்வாறு உருவெடுத்துள்ளது. சில மளிகைக்கடை மாமாக்கள் தக்காளி, வெங்காயம்கூட ஐ.டி. மக்கள் என்றால் இரட்டை விலை சொல்லுகிறார்களாம். மறுத்தால், 'லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறாயே, கொடுத்தால் என்ன?' என்கிறார்களாம். இது வெறும் வயிற்றெரிச்சல் அல்ல! இக்கேள்வியை ஞாபகத்தில் வையுங்கள்.
உணவு மிகுதியால் ஏற்படுவது சர்க்கரை நொய். இந்தியாவில் 40 மில்லியன் சர்க்கரை நோயாளிகள். அதே நிலத்தில் அருகருகே 50 மில்லியன் பட்டினியாளர்கள். இந்த முரணை மாற்ற?
நாம் ஜகத்தை அழிக்க வேண்டாம். நம்மிடம் அமெரிக்க ராணுவம் இல்லை.
காந்தி சொன்ன மாதிரி நகரங்களை அழிக்கலாம்.
நம்மால் அதுவும் முடியாது! உலகச் சந்தை நுகர்வோர் அடிமைகளுக்கு நகரங்களை விட்டால் வேறு போக்கிடம் ஏது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...