Skip to main content

கதை சொல்ல வாழ்கிறேன்:அத்தியாயம் 1


வாழ்க்கை ஒருவர் வாழ்ந்ததல்ல,
சொல்வதன் பொருட்டு
எதை மற்றும் எப்படி நினைவுபடுத்துகிறோமோ அதுவே

வீட்டை விற்க தன்னுடன் வருமாறு அம்மா என்னை அழைத்தாள். என் குடும்பம் வாழ்ந்த தூரத்து நகரமொன்றிலிருந்து அன்று காலை அவள் வ்ந்திருந்தாள். மேலும் என்னை எப்படி கண்டுபிடிப்பது என்பது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. தெரிந்தவர்களிடம் கேட்டதில், லைப்பறியோ முண்டோவிலோ, நான் தினமும் எழுத்தாள நண்பர்களை சந்திப்பதற்காக செல்லும் அருகிலுள்ள கபேக்களிலோ தேடுமாறு கூறினர். அவளிடம் இதைக் கூறிய ஒருவர் இவ்வாறு எச்சரித்தார்: "கவனமா இருங்க, அவனுங்களுக்கு எல்லாம் மரை கழன்று போச்சு". சரியாக பன்னிரெண்டு மணிக்கு அவள் வந்தாள். பார்வைக்கு புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள மேஜைகளிடையே சத்தமின்றி நடந்து என் முன் வந்து நின்று, தன் நல்ல காலத்தில் அவள் கொண்டிருந்த குறும்புத்தனமான புன்னகையுடன் என் கண்களை நோக்கி, நான் எதிர்வினையாற்றும் முன்பே சொன்னாள்: "நான் உன் அம்மா"
அவளிடம் எதுவோ மாறியிருந்தது; அதனால் முதல் பார்வையிலேயே அவளை அடையாளம் காண இயலவில்லை. அவளுக்கு நாற்பத்தைந்து வயது. பதினோரு பிரசவங்களையும் சேர்த்து, அவள் பத்து வருடங்கள் கர்ப்பமாகவும், குறைந்த பட்சம் பத்து வருடங்கள் குழந்தைகளை வளர்க்கவும் செலவிட்டுள்ளாள். வயதாகும் முன்னே தலை நரைத்து விட்டது. முதன்முதலாய் அணிந்துள்ள கண்ணாடிக்கு பின்னே கண்கள் பெரிதாகவும், அதிர்ச்சியுற்றும் காணப்பட்டன. அவள் அம்மாவின் மரணத்தை அனுசரிப்பதற்கு கண்டிப்பாக அவள் கறுப்பு ஆடையே அணிந்த போதும், இறுதிக் கால கம்பீீரத்துடன், தன் திருமண புகைப்படத்தில் கொண்டிருந்த ரோமாபுரி அழகை அப்போதும் தக்க வைத்திருந்தாள். எல்லாவற்றிற்கும் முன்னே, என்னை கட்டி அணைப்பதற்கும் கூட முன்பே, தனது வழக்கமான சம்பிரதாய முறையில் சொன்னாள்:

"தயவு செஞ்சு வீட்டை விக்கிறதுக்கு எங்கூட வான்னு உன்ன கூப்பிட வந்தேன்"

அவள் என்னிடம் எந்த வீடென்றோ, எங்குள்ளதென்றோ சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் எங்களுக்கு இப்பூமியில் ஒரே ஒரு வீடுதான் உள்ளது: நான் பிறக்கும் அதிர்ஷ்டம் பெற்ற, எட்டு வயதிற்கு மேல் நான் வாழ்ந்திராத அரகடகாவிலுள்ள என் தாத்தா பாட்டியின் பழைய வீடு. ஆறு கல்வி அரையாண்டுகளை கையில் கிடத்ததையெல்லாம் படிப்பதற்கு அர்ப்பணித்தும், ஸ்பானிய பொற்காலத்தின் மறுஆக்கம் செய்ய முடியா கவிதைகளை நினைவிலிருந்து ஒப்புவித்தும் விட்டு, அப்போது தான் நான் சட்டப்படிப்பை விட்டு வெளியேறி இருந்தேன். நான் ஏற்கனவே நாவல் எழுதும் கலையை பயில்வதற்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் மொழிபெயர்ப்பிலும், கடன் வாங்கியும் படித்திருந்தேன்; தினசரி இணைப்புகளில் ஆறு கதைகள் பிரசுரித்து, நண்பர்களின் பேராதரவையும், சில விமர்சகர்களின் கவனத்தையும் பெற்றிருந்தேன். வரும் மாதத்தில் எனக்கு வயது இருபத்து மூன்றாகும் போது, ராணுவ சேவைக்கான வயதைத் தாண்டியிருப்பேன்; மேலும், கொனூறியா நோயின் இரு தாக்குதல்களை தாக்குப் பிடித்து விட்டேன். தினமும், எதிர்காலம் பற்றிய கவலை இன்றி, மிக மட்டமான புகையிலையிலிருந்து தயாரிக்கப்பட்ட அறுபது சிகரெட்டுகளை புகைத்து வந்தேன். பாரன்குவில்லாவிலும், கொலொம்பியாவின் கரீபிய கடற்கரை பகுதியிலுள்ள கார்டகீனாடெ இண்டியாஸிலுமாய் என் ஓய்வு நேரத்தை பிரித்து, எல் ஹெரால்டோ எனும் செய்தித்தாளுக்கு தினசரி உரை எழுதுவதில் கிடைக்கும் ஒன்றுக்கும் உதவாத வருமானத்தில் முடிசூடா மன்னன் போல் வாழ்ந்தும், எங்கு இரவில் தங்க நேர்கிறதோ அங்கு க்ிடைக்கும் ஏற்ற துணையுடன் படுத்தும் கழித்து வந்தேன். என்னவோ, என் பேராவல்களின் நிச்சயமின்மையும், வாழ்வின் குழப்பமும் போதாது என்பது போல், என் நண்பர்கள் குழுவும் நானும் இணைந்து, மூன்று வருடங்களாய் பூயன் மேயர் பிரசுரிக்க முயன்று வரும் தீரமிக்க பத்திரிக்கை ஒன்றை நிதியேதும் இன்றி துவங்க முயன்று வந்தோம். வேறென்ன வேண்டும்?

ரசனையால் அன்றி வறுமை காரணமாகவே, இருபது வருடங்களுக்கு பிறகான மோஸ்தரை அப்போதே கொண்டிருந்தேன்: கட்டற்று வளர்ந்த தாடி, கலைந்த தலைமயிர், ஜீன்ஸ், பூப்போட்ட சட்டை மற்றும் யாத்திரிகனின் செருப்புகள். இருண்ட திரையரங்கு ஒன்றில் எனக்கு பரிச்சயமான பெண் ஒருத்தி, நான் அருகிலிருப்பது தெரியாமல், சொன்னாள், "பாவம் கெபிட்டோ, வெளங்காம போயிட்டான்". இதனால் இப்போது பொருள்படுவது என்னவென்றால் என் அம்மா வீட்டை விற்க அவளோடு செல்ல என்னை அழைத்த போது, அதை மறுப்பதற்கு என்னிடம் எந்த காரணமும் இல்லை என்பதே. அவளிடம் போதிய பணம் இல்லை என்றாள்; சுயகௌரவம் காரணமாய் என் செலவுகளை நானே ஏற்றுக் கொள்வதாய் சொல்லி விட்டேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...